8/15/2008

தங்கம் சுட்டவன் தகுதியில் கெட்டவன்

ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா?

இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

இது அபிநவ் பிந்த்ரா என்ற தனியொரு பணக்கார இளைஞனின் வெற்றி. ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை.

துப்பாக்கி சுடுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு. அபிநவ் பயன்படுத்தும் துப்பாக்கியின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய்கள். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மிக நவீனமான துப்பாக்கிகளுடன் அபிநவ் பயிற்சி செய்வதற்காக சொந்தத்தில் வைத்திருக்கும் பயிற்சிக்கூடம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. அபிநவ்வின் அப்பா முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கென்றே உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலை நடத்துகிறார். `அபிநவ் இன்' என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஓட்டலை டேராடூனில் கட்டி வருகிறார். அதை மகனுக்கு ஒலிம்பிக் சாதனைக்கான பரிசாக தரப் போகிறார்.

அரசு அளித்த பயிற்சியாளரும் பயிற்சியும் சுமார் என்று ஒதுக்கிவிட்டு தன் சொந்த செலவில் பயிற்சியெடுத்துக் கொண்டவர் அபிநவ். எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ?

இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது? துப்பாக்கி சுடுவது முதலில் ஒரு விளையாட்டா என்பதே யோசிக்கப்பட வேண்டும்.

அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை. பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..

No comments:

About Me